குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரம் செய்ய வேண்டாம்: சாதிமறுப்பு திருமணம் செய்யுங்கள் ராகுல்காந்தி : மத்தியமைச்சர் ராம்தாஸ் விமர்சனம்.!!!

மும்பை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் குறித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, நாம் இருவர் நமக்கு இருவர் என்று மத்திய அரசு செயல்படுகிறது என விமர்சனம் செய்தார்.

இதனால், அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தியின் இந்த கருத்தை விமர்சனம் செய்த இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வாக்கியம் குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரத்திற்குத்தான் பயன்படுத்தப்பட்டது.

அதனை ராகுல் காந்தி விளம்பரப்படுத்த விரும்பினால் அதற்கு முதலில் திருமணம் செய்துகொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தியின் சாதி மறுப்பு கொள்கையை நிறைவேற்றும் விதமாக பட்டியலினப் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள வேண்டும். பின்பு இளைஞர்களை ஊக்குவிக்க இதைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். ராகுல் குறித்த ராம்தாஸ் அத்வாலே விமர்சனம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

Related Stories: