‘வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்’ இலவச வீடு ஒதுக்கி தருமாறு மாஜி எம்எல்ஏ நன்மாறன் மனு: மதுரை குறைதீர் கூட்டத்தில் வழங்கினார்

மதுரை: இலவச வீடு ஒதுக்கி தருமாறு மதுரையின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மனு வழங்கினார். மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் (77). இவர் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு, மனைவி சண்முகவள்ளியுடன் நேற்று வந்தார். குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், மாவட்ட வருவாய் அலுவலர் ெசந்தில்குமாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். மனுவில், ‘‘நான் முன்னாள் எம்எல்ஏ. இருமுறை அப்போதைய மதுரை கிழக்கு தொகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது பொன்னகரம் பிராட்வேயில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். இதுவரை எனக்கு சொந்த வீடு இல்லை.

இதனால், ராஜாக்கூர் கிராமத்தில், வழங்கப்படும் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் திட்டத்தின் கீழ் எங்களுக்கு கீழ் தளத்தில் ஒரு வீடு ஒதுக்கி தர வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளருக்கு டிஆர்ஓ பரிந்துரை செய்தார். ஏற்கனவே இவர் வீட்டு வசதி வாரியத்தில் வீடு கேட்டு, மனு கொடுத்தும் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: