நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழந்தைகளுடன் இளம்பெண் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில்: தக்கலையை அடுத்த கப்பியறை பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லெட். அவரது மகள் அனிஷா (29). எம்ஏ, பிஎட் பட்டதாரி. இவருக்கும், திருவிதாங்கோடு புதுக்காடு வெட்டிவிளை பகுதியை சேர்ந்த வினோலின் ஜோஸ் உடன் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.3 வயதில் மகளும், 6 மாத மகனும் உள்ளனர். இந்த நிலையில் அனிஷா 2 குழந்தைகளுடன் இன்று காலை எஸ்பி அலுவலகம் வந்தார். திடீரென அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே எஸ்பி இன்ஸ்பெக்டர் கண்மணி, கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது அனிஷா கூறுகையில், ‘எனக்கு திருமணமான 4 மாதங்களில் கணவர் வெளிநாடு ெசன்று விட்டார். அதன்பிறகு கணவரின் வீட்டார் என்ைன கொடுமைப்படுத்தினர். உடனே கலெக்டர் ஆபீஸ் மூலம், வெளிநாட்டில் இருந்த கணவரை ஊருக்கு வரவழைத்தேன். ஆனால் அவர் என்னை சரியாக கவனிக்கவில்லை. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு குளச்சல் போலீசில் புகார் செய்தேன். என்னை சரியாக கவனித்து கொள்வதாக கணவர் வீட்டார் எழுதி கொடுத்தனர். அதன் பிறகும் சரியாக கவனிக்கவில்லை. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மீண்டும் குளச்சல் போலீசில் புகார் செய்தேன்.

அப்போது திருமணத்தின்போது வழங்கிய சீர்வரிசைகளை திரும்ப பெற்றுத்தருமாறு போலீசில் கூறினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொருளை எடுக்க கணவர் வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டி இருந்தது. ஆகவே கணவர் வீட்டில் உள்ள எனது பொருட்களை எடுத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் அனிஷாவை இரணியல் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பொருட்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர். இதையடுத்து அனிஷா இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

Related Stories: