அரவக்குறிச்சியில் போக்குவரத்து அதிகமான தாராபுரம் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் அபாய பள்ளம்-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

*இது உங்க ஏரியா

அரவக்குறிச்சி :  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா தலைநகராகும். இங்கு தாராபுரம் சாலை வழியாக தினசரி 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. மேலும், தோகைமலை அருகில் கரிக்காலியில் உள்ள சிமென்ட் ஆலையில் இருந்து தினசரி கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும் மற்றும் கேரளாவிற்கு சிமென்ட் லோடு லாரிகள் நூற்றுக்கணக்கில் அரவக்குறிச்சி வழியாக தான் செல்கிறது.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவை இணைக்கும் முக்கிய சாலையாகவும் இந்த தாராபுரம் உள்ளது. அரவக்குறிச்சி நகரின் முக்கிய சாலையான தாராபுரம் சாலையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மேற்கிலிருந்து அதி வேகமாக வருகின்றன. கரூர் சாலை சந்திப்பில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

பள்ளி திறக்கும் மற்றும் பள்ளி விடும் நேரங்களில் அதிக அளவில் மாணவ மாணவிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பஸ்சிற்காக காத்திருப்பார்கள். பள்ளி கல்லூரி வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் போக்குவரத்து அதிகமுள்ள தாராபுரம் சாலை திருச்சிராப்பள்ளி பேங்க் அருகில்விபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான பள்ளம் ஏற்பட்டுள்ளது.  பள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியும் சீரமைக்கப்படவில்லை.

தற்காலிகமாக கற்களை போட்டுள்ளனர். அதுவிபத்தை அதிகப்படுத்தும் நிலையிலுள்ளது. குறுகலான இடத்திலுள்ள இந்த பள்ளத்தில் டூ வீலரில் வருபவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும் போது கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். பெரிய விபத்து ஏற்படும் முன்பு அபாயகரமான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: