எல்லையில் சீன ராணுவ ஊடுருவலைக் காட்டிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பது எவ்வகையில் ஆபத்தானது?.. சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது குறித்து தலைவர்கள் கண்டனம்

டெல்லி: சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு வெளிநாடுகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். அதன்படி, வெளிநாட்டை சேர்ந்த கிரெட்டா தன்பர்க் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘டூல் கிட்’ என்ற பெயரில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான வாசகங்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், திவ்யா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் பி.பி.எம் படித்து வருவது தெரியவந்தது. மேலும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இது தவிர, ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்த இவர், சமூக வலைத்தளம் வாயிலாக பலரிடம் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்ததால், வன்முறையை தூண்டி விடுவதாக டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திஷா ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அவரை கைது செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அனைத்து மாணவர்களும், இளைஞர்களும் குரல் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். மேலும், எல்லையில் சீனப்படைகள் ஊடுருவியதைவிடவும், விவசாயிகளின் எதிர்ப்பை ஆதரிக்கும் விதமான ஒரு டூல்கிட் மிகவும் ஆபத்தாவிட்டது என விமர்சனம் செய்தார். மேலும் டெல்லி போலீஸ் ஒடுக்கு முறையாளர்களின் கருவியானது வருத்தம் அளிக்கிறது என எனவும் தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இது தேவையற்ற துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் என்றும் மாணவி திஷாவுக்கு தன்னுடைய முழு ஆதரவும் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, விவசாயிகளின் மகளை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதால் போராட்டத்தை பலவீனப்படுத்த முடியும் என மோடி அரசு நினைக்கிறது. ஆனால் இது இளைஞர்களை தட்டி எழுப்பும், ஜனநாயகத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்;  21 வயதான சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்திருப்பது ஜனநாயத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். நமது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றமில்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; செய்தியில், விவசாயிகளுக்கு ஆதரவான டூல்கிட் பகிர்ந்ததற்காக இந்திய அதிகாரிகள் மற்றொரு இளம் ஆர்வலரை கைது செய்து உள்ளனர். இவ்வாறு அரசாங்கம் ஆர்வலர்களின் குரலை ஒடுக்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

Related Stories: