தாதர்- நெல்லை வாரம் மும்முறை சிறப்பு ரயில் 27ம்தேதி முதல் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: நெல்லை- தாதர் இடையே வாரம் மும்முறை சிறப்பு ரயில் வரும் 27ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து மும்பைக்கு கோயம்புத்தூர், மங்களூர் வழியாக ஏற்கனவே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக  சேலம், தர்மபுரி, ஹூப்ளி வழியாக வாரம் மும்முறை சிறப்பு  ரயிலை நெல்லையில் இருந்து மும்பைக்கு (தாதர்) இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வண்டி எண் 01021 தாதர்- நெல்லை வாரம் மும்முறை சிறப்பு ரயில் பிப்.27 முதல் சனி, செவ்வாய், புதன்கிழமைகளில் தாதரில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு திங்கள், வியாழன்,  வெள்ளிக்கிழமைகளில் காலை 11.40 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 01022 நெல்லை- தாதர் வாரம்  மும்முறை சிறப்பு ரயில் மார்ச் 1 முதல் திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு தாதர் சென்றடையும். இந்த ரயில்கள் கல்யாண், புனே, சதாரா, கர்ட், சங்கிலி, குடாட்சி, கட்பிரபா, பெல்காம், லோன்டா, ஆழ்னவார், தார்வார், ஹூப்ளி, ஹவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தேவாங்கிர், பிரூர், கடூர், அரிசிகரே, திப்டூர், தும்குர், யஸ்வந்த்பூர், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3  இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 காப்பாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். மறுஅறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் இந்த ரயில்களில் முன்பதிவு அவசியமாகும்.

Related Stories: