அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இரவில் கொட்டப்படும் கழிவுகள்: துர்நாற்றத்தால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதி

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகர் பகுதியில் இருந்து ராஜாமடம் செல்லும் வழியில் மகிழங்கோட்டை பிரிவு சாலைக்கு அருகில் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதில் மீன் கழிவுகள், கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் என அனைத்து கழிவுகளும் சாலையோரங்களில் கொட்டப்பட்டு கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த கழிவுகளைத் தின்பதற்காக நாய்கள் மற்றும் பறவைகள் வந்து அதை தின்பதோடு மட்டுமல்லாமல் சாலை மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கழிவுகளை கொண்டு போய் விட்டு விடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று பரவும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்து வரும் நிலையில் வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுனர்கள் மட்டுமல்லாமல் பேருந்துகளில் வரும் பயணிகள் இந்த இடத்திற்கு வரும்போது துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை மூடிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கழிவுகள் எங்கிருந்து வருகிறது, யார் வந்து கொட்டுகிறார்கள் என்பதுகூட இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இரவு நேரங்களில் வந்து கொட்டி விட்டுச் செல்வதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக இந்த கழிவுகளை அகற்றவும், சாலையோரங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: