காசர்கோடு அருகே மகளின் திருமண நகைகளை ரயிலில் தொலைத்த நடிகர்: மீட்டு ஒப்படைத்தனர் ரயில்வே போலீசார்

திருவனந்தபுரம்: மலையாள  சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் கொச்சியை சேர்ந்த நாதிர்ஷா.  50க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துள்ளார். ஏராளமான பாடல்களை எழுதிய இவர் பல பாடல்களை பாடியும்  உள்ளார்.

இந்த நிலையில் இவரது  மகள் ஐஷாவுக்கும், காசர்கோட்டை சேர்ந்த லத்தீப் மகன் பிலால் என்பவருக்கும்  திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கொச்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.. பின்னர்  காசர்கோட்டில் திருமணம் நடந்தது. இதையொட்டி  நாதிர்ஷாவும், அவரது குடும்பத்தினரும் கொச்சியில் இருந்து இரவில் மலபார்  எக்ஸ்பிரசில் காசர்கோடு புறப்பட்டனர். அப்ேபாது அவர்கள் திருமணத்துக்கு  தேவையான நகைகள் மற்றும்  பொருட்களையும் உடன் கொண்டு சென்றனர். மறுநாள்  காலையில் காசர்கோட்டில் இறங்கியபோது நாதிர்ஷா திருமண நகைகள் அடங்கிய  பேக்கை எடுக்க மறந்து விட்டார். சிறிதுநேரத்தில் அதை அவர் உணர்ந்தபோது  ரயில் புறப்பட்டது.

இதனால் பதறிப்போன அவர் காசர்கோடு ரயில்வே போலீசாரிடம்  தகவல் தெரிவித்தார். போலீசார் ரயிலில் பணியில் இருந்த டிக்கெட்  பரிசோதகருக்கு தகவல் தெரிவித்தனர். டிக்கெட் பரிசோதகர் சென்று பார்த்தபோது  பேக் இருக்கைக்கு  அடியில் பத்திரமாக இருந்தது.  இதையடுத்து அவர் பேக்கை  எடுத்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து நாதிர்ஷாவுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ரயில் மங்களூருவை அடைந்தது. நாதிர்ஷா  தனது நண்பரை  அங்கு அனுப்பி நகைகளை எடுத்து வந்தார்.

Related Stories: