கொரோனா தடுப்பூசி போடுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கலாமா ?..மத்திய, மாநில அரசுகள் பதிலளியுங்கள் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை : கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளை சேர்க்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில சுகாதார துறை செயலாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்று பரவாமல்  தடுக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு, சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளையும் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சமூக நீதி முன்னேற்றத்துக்கான மைய இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், கொரோனா தடுப்பு விதிகளான தனி மனித விலகல், முக கவசம் அணிவது போன்றவற்றை பின்பற்றுவதில் சவால்களை சந்திப்பதால் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பேர், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். ஐம்பது வயதுக்கு குறைவான, பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்னுரிமை அளித்த மத்திய அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க தவறிவிட்டது.இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி போட மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய,  மாநில சுகாதார துறைகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: