காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம் எதிரொலி!: குன்னூர் அருகே செயல்படும் தனியார் விடுதிகளுக்கு அதிரடி சீல்..!!

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் செயல்படும் 15 விடுதிகளுக்கு நீலகிரி மாவட்ட அதிகாரிகள் அதிரடியாக சீலிட்டனர். உதகை அருகே மசினகுடி மாவனல்லா பகுதியில் கடந்த மாதம் காட்டு யானையை தீ வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மசினகுடி தர்கா ரோட்டை சேர்ந்த பிரசாத், மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரேமண்ட் டீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து மசினகுடி பகுதியில் குடியிருப்புக்கான அனுமதியை பெற்று விடுதியாக பயன்படுத்தி வந்த 55 தனியார் விடுதிகள் சீலிடப்பட்டன. இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள குறும்பாடி ஆதிவாசி கிராமம் அருகே செயல்பட்டு வந்த பிரபலமான விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் பர்லியார் பகுதியில் செயல்படும் 15 விடுதிகளுக்கு இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி அதிகாரிகள் சீல் வைத்தனர். எனினும் விதிகளை மீறி விடுதிகளை கட்டும் போது விட்டுவிட்டு பரபரப்பான சம்பவங்கள் நடக்கும் போது கண்துடைப்புக்கு நடவடிக்கை எடுப்பது அதிகாரிகள் வழக்கம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: