கட்சியையும், ஆட்சியையும் ஒழிக்க நினைத்தவர் டிடிவி.தினகரன்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

சென்னை: அதிமுக கட்சியையும், ஆட்சியையும் ஒழிக்க நினைத்தவர் டிடிவி.தினகரன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். காஞ்சிபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வந்தார். பின்னர், காஞ்சிபுரம் சங்கரமடம் சென்று, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து விட்டு காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. டிடிவி.தினகரன் கட்சி ஆரம்பித்து கட்சிக் கொடியையும், சின்னத்தையும் வேட்பாளர்களையும் அறிவித்தபோது, அவரது செயலுக்கு சசிகலா எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆசி வழங்கினார்.

இப்போது வந்து அதிமுகவில் உரிமை கொண்டாடுவதில் என்ன நியாயம். திமுகவை விட, அதிமுக கட்சியையும், ஆட்சியையும் ஒழித்துவிட வேண்டும் என அதிகம் தொல்லை கொடுத்தவர் டிடிவி தினகரன்.  நாடாளுமன்ற தேர்தலுடன் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியிடாமல் இருந்திருந்தால், அதிமுக மேலும் 6 இடங்களை கைப்பற்றி இருக்கும் என்றார். அவருடன், அதிமுக காஞ்சி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: