சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கணவாய்புதூர் கிராமம் ராமமூர்த்திநகரை சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்டான இவர், கேரள வனப்பகுதியில் தனது கூட்டாளிகளுடன் சுற்றித்திரிந்தார். கடந்த 2019 அக்டோபர் 28ம் தேதி, கேரளாவில் நடந்த துப்பாக்கி சண்டையில், மணிவாசகம் உள்பட 4 மாவோயிஸ்ட்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சேலம் ராமமூர்த்திநகர் சுடுகாட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த அவரின் ஆதரவாளர்களும், அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தினரும், ஆயுதம் ஏந்துவோம், ரத்த கடனை ரத்தத்தால் பழி தீர்ப்போம் என கோஷமிட்டனர். இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி, மைத்துனர் சாலிவாகனன் மற்றும் மதுரையை சேர்ந்த விவேக், காடையாம்பட்டி சுதாகர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவான 5க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர்.