சசிகலா வருகையை பார்த்து அமைச்சர்கள் பதற்றமடைவது ஏன்? டிடிவி.தினகரன் கேள்வி

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டதாவது: சசிகலாவை வரவேற்க ஜெயலலிதா மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில் அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள். அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக் கதைகளையும் டிஜிபியிடம் மீண்டும் மீண்டும் தரும் பொய் புகார்களையும் பார்க்கும் போது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் மீது பழிபோட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சசிகலாவால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: