சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சோதனைச்சாவடி பகுதியில் உலா வரும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது.
இந்நிலையில், வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வபோது சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை பகல் மற்றும் இரவு நேரங்களில் கடந்து செல்வதோடு சாலையில் நடமாடுகின்றன. கடந்த சில நாட்களாக ஆசனூர் அடுத்துள்ள தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை பகல் நேரங்களில் சோதனைச்சாவடியை சுற்றி,சுற்றி வருகிறது. வனத்துறையினர் விரட்டி அடித்தாலும் மீண்டும் மீண்டும் சோதனைச்சாவடி பகுதியில் சுற்றித்திரியும் இந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.