மதுரை:-மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் ஏதும் இதுவரை துவங்கவில்லை. தேர்தல் பிரசாரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மிகப்பெரிய சாதனையாக மக்களின் முன்வைக்க வேண்டும் என்று தமிழக பாஜ மற்றும் அதிமுக தலைவர்கள் கனவில் இருந்தனர். வெறும் பேப்பரில்தான் இன்று வரை எய்ம்ஸ் என்ற நிலையில், பாஜ மற்றும் அதிமுக தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.மத்தியில் 2ம் முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட பாஜ கட்சி, கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை தமிழகத்துக்கு உருப்படியாக ஏதும் செய்யவில்லை. இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று அறிவிக்கப்பட்ட போது, தமிழக பாஜ தலைவர்கள் உற்சாகமடைந்தனர். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டிய போது, கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கும் என மோடி அறிவித்தார். ஆனால் அதோடு சரி, எய்ம்சை மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடுப்பாகிப் போன மதுரை வக்கீல் ஒருவர், கடந்த 2020 டிசம்பரில் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தமிழக அரசு, ‘‘223 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து விட்டோம். 45 மாதங்களில் கட்டுமானப்பணி முடிந்து விடும்’’ என்று ஐகோர்ட் கிளையில் தெரிவித்தது.