தமிழக மீனவர்களை கொன்றது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்: அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

புதுடெல்லி: இலங்கை கடற்படையினர் சமீபத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரை கொன்றது தொடர்பாக மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் நேற்று கேள்வி எழுப்பினர். திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், ‘‘ கடந்த 19ம் தேதி 4 தமிழக மீனவர்கள் காணாமல் போயினர். 4 நாட்களுக்கு பின் அவர்களின் சடலம் கடலில் மிதப்பதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையின் காரணமாக மீன்பிடி தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். உடனடியாக பிரதமர் மோடி இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ம்,” என்றார்.

அதிமுக எம்பி தம்பிதுரை பேசுகையில், ‘‘முன்பெல்லாம் தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படுவார்கள். பின்னர் இந்தியா அவர்களை திரும்ப அழைத்து வரும். ஆனால், தற்போது தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதுவரை தமிழகத்தை சேர்ந்த 245 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக் கடிதம் எழுதி இருக்கிறார்,’’ என்றார். பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதிலில், ‘தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசிடம் கடுமையான கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. அதிலும் இந்த சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாத செயல், இலங்கை அரசிடம் இது தொடர்பாக மிக, மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,’ எனத் தெரிவித்தார்.

Related Stories: