ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை சிறையில் அடைத்தது நியாயமில்லை!: ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு..!!

மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்ய அதிபர் புதினையும் அவரது அரசின் ஊழலையும் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கடுமையாக எதிர்த்து வந்தார். அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் அளிக்கப்பட்ட நிலையில் தேநீரில் விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. சிகிச்சைக்கு பிறகு தாயகம் திரும்பிய அவரை கடந்த 17ம் தேதி ரஷ்ய போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து ரஷ்யா முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். பேரணியில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அலெக்சியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷியாவை வலியுறுத்தின. இது தொடர்பான வழக்கை விசாரித்த மாஸ்கோ நீதிமன்றம் அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இருப்பினும் ஏற்கனவே சில காலம் அவர் வீட்டுச் சிறையில் இருந்ததால், அதற்கு ஏற்ற வகையில் இந்த தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதற்கு உலக நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், போன்ற பல்வேறு நாடுகள் இந்த சிறை தண்டனை நியாயம் அல்ல என்றும் மோசமான நடவடிக்கை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அலெக்ஸிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: