புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலுக்கு பொதுமக்களிடம் நிதி திரட்டும் பிரசாரத்தை டெல்லி பாஜ கட்சி தலைவர் ஆதேஷ் குப்தா நேற்று தொடங்கினார். பாஜ கட்சியின் டெல்லி பிரிவு முன்னாள் தலைவரும் தற்போதைய எம்பியுமான மனோஜ் திவாரி, ராமர் கோயில் கட்டுவற்காக மக்களிடம் நிதி திரட்டும் ரத யாத்திரையை வடகிழக்கு டெல்லி பகுதியில் தொடங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால், விவசாயிகளின் போராட்டம் மற்றும் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் போன்ற காரணங்களை மேற்கோள்காட்டி தனது ரதயாத்திரை நிகழ்ச்சியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து இருந்தார். இயல்பான சூழல் திரும்பியவுடன் ரதயாத்திரை நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், மனோஜ் திவாரி ரதயாத்திரை நிகழ்ச்சியை ரத்து செய்தாலும், டெல்லி பிரிவு பாஜ கட்சி நேற்று நிதி திரட்டும் பணியை தொடங்கியது.