புதுடெல்லி: மாடல் டவுன் வீதிகளில் குப்பைகளை திறந்தவெளியில் கொட்டுவோர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என வடக்கு மாநகராட்சி(என்டிஎம்சி) நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வடக்கு மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் கடந்த மூன்று வாரங்களாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் குப்பைகளை லாரிகள் கொண்டு வந்து மாடல் டவுன் வீதிகளின் மார்க்கெட், குடியிருப்பு பகுதிகளில் கொட்டி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் சார்பில், மாடல் டவுன் சங்க கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்த்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அதில், கொரோனா பரவும் அசாதாரணமான சூழல் நிலவும் இந்த காலத்தில் துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை மாடல் டவுன் தெருக்களில் கொட்டுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கடந்த மூன்று வாரங்களாக துப்பரவு பணியாளர்கள் தங்களது கடமையிலிருந்து விலகி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.