தாளவாடி அருகே இன்று அதிகாலை: சாலையில் நடமாடிய சிறுத்தை

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே இன்று அதிகாலை சாலையில் நடமாடிய சிறுத்தையை செல்போனில் படம் பிடித்த வாலிபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இன்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி மலைப்பகுதியை நோக்கி 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

கும்டாபுரம் அருகே வனப்பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதி சாலையோரம் ஒரு சிறுத்தை நின்று கொண்டிருந்ததை பார்த்து காரில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை பார்த்த சிறுத்தை மெதுவாக சாலைக்கு வந்து சிறிது தூரம் ஓடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சிறுத்தையை கண்டு அதிர்ச்சி அடைந்த காரில் இருந்த நபர்கள் உடனடியாக தங்களது செல்போனில் சிறுத்தை நடமாட்டத்தை வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: