ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் வனத்துறையினர் கைப்பற்றிய நாட்டு வெடிகுண்டுகள், வெடிபொருட்களை சென்னையிலிருந்து வந்த கமாண்டோ படை உதவியுடன் செயலிழக்க செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியை சுற்றி சுமார் 70க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சட்ட விரோதமாக வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிப்பொருட்களுடன் வனப்பகுதிக்குள் சுற்றி திரிந்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 7 வெடிபொருட்கள் இருந்தன.
இதனை பாதுகாப்புடன் வனப்பகுதியில் செயலிழக்க செய்யும்படி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்பேரில் ஒடுகத்தூர் வனச்சரகர் பாலாஜி, சென்னை கமாண்டோ படை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான சுமார் 7 பேர் கொண்ட குழுவினர், தீயணைப்பு துறையினர், ஒடுகத்தூர் அரசு மருத்துவர் ஞானம்பாலி குழு மற்றும் வேப்பங்குப்பம் தலைமை காவலர் ராமன் தலைமையிலான குழு என 5 துறை அதிகாரிகளின் முன்னிலையில் நேற்று 7 நாட்டு வெடிகுண்டுகள், மற்றும் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக எடுத்துக்கொண்டனர்.