சென்னை : தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தை ஏற்றி உதவி காவல்ஆய்வாளரை கொன்ற சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாலு. இவர் கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது முருகவேல் என்பவர் குடித்துவிட்டு சுற்றி திரிந்ததை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், அங்கிருந்த சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து பைக்கில் சென்று கொண்டிருந்த எஸ்.ஐ. பாலு மீது மோதியுள்ளார். இதில் பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.