ஒத்தையூர் சாலை ரொம்ப ‘ஒர்ஸ்ட்’ பொதுமக்கள் அவதி

ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் அருகே ஒத்தையூர் கிராம சாலை மிகவும் சேதமடைந்து சகதி காடாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் ஒத்தையூரில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் தேவைக்காக தினமும் பொரூர், கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம், பழநி, தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கு ஒத்தையூர் சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து இப்பகுதியினர் கூறுகையில், ‘ஒத்தையூருக்கு தற்போது வரை பஸ் வசதியே கிடையாது. இதனால் நாங்கள் எந்த ஒரு தேவைக்கும் டூவீலர்களில்தான் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சாலை மோசமாக இருப்பதால் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்தையூர் சாலையை புதுப்பித்து தருவதுடன், அரசு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: