ராதிகா தேர்தலில் போட்டி 1, 2 சீட் கொடுத்தால் வேண்டாம்... 3வது அணிக்கு செல்ல தயார்: சமக தலைவர் சரத்குமார் பேட்டி

திருப்பரங்குன்றம்:  கூட்டணியில் 1, 2 சீட்டு கொடுத்தால் வாங்க மாட்டோம், 3வது அணிக்கு செல்லத் தயார் என சரத்குமார் தெரிவித்தார். மதுரை, திருப்பரங்குன்றத்தில் சமத்துவ மக்கள் கட்சி மண்டல நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய  சமக தலைவர் சரத்குமார், ‘‘அதிமுகவின் மூத்த உறுப்பினர் நான். 1996ல் அரசியலுக்கு வந்தேன். புரட்சித்தலைவரை உரிமை கொண்டாடும் முழு உரிமை எனக்கு உள்ளது’’ என்றார்.  பின்னர் நிருபர்களிடம் சரத்குமார் கூறுகையில், ‘‘அதிமுக அணியில் ஒன்று, இரண்டு சீட்டுகள் கொடுத்தால் வாங்க மாட்டோம். கூடுதல் சீட்டுகள் பெறுவோம். மூன்றாவது அணி அமைந்து அழைப்பு வந்தால் செல்ல தயார். எங்களது மகளிர் அணிச்செயலாளர் ராதிகா சரத்குமார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார். தமிழகத்தின் மேல் அதிக பாசம் கொண்டதால், தேசிய கட்சிகள் அனைத்தும் தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. அரசியலில் சசிகலா நிலைப்பாட்டை தெரிவித்தபின் அது குறித்து சிந்திக்கப்படும்’’ என்றார். ராதிகா சரத்குமார் கூறுகையில், ‘‘அனைத்து இடங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறேன். நாட்டுக்கு நல்ல சிஸ்டம் தேவை’’ என்றார்.

Related Stories: