மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்ததால் முதல் பரிசு வழங்க ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.மதுரை மாவட்டம், மேலூர் அரிட்டாபட்டியைச் சேர்ந்த கருப்பணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 33ம் எண் பனியன் வழங்கப்பட்ட கண்ணன் என்பவர் அதிக காளைகளை அடக்கியதற்காக முதல் பரிசு பெற்றார். ஆனால் இவர் தொடர்பான எந்த ஆவணமும் ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் இல்லை. ஆனால், போட்டியில் பங்கேற்று 33ம் எண் பனியன் அணிந்திருந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் முதல் சுற்றில் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவரது 33வது நம்பர் பனியனை சட்டவிரோதமாக எந்தவித பரிசோதனையும் செய்யாமல் கண்ணன் என்பவர் அணிந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார். இவருக்கான பரிசு முதல்வரால் ஜன. 30ல் (இன்று) வழங்கப்படவுள்ளது. முறைகேடாக பரிசு பெற்றது குறித்து மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முதல் பரிசு (கார்) வழங்கத் தடை விதிக்கவேண்டும். முறையாக விசாரித்து 2ம் பரிசு அறிவிக்கப்பட்ட எனக்கு முதல் பரிசு வழங்க உத்தரவிட வேண்டும்.