சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (நேற்று) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இந்த முக்கிய நாளில் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டியது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கடமையாகும். ஆனால் பல எதிர்க்கட்சிகள் முதல் நாளிலேயே ஜனாதிபதி உரையை புறக்கணிக்கும் வகையில் பங்கேற்காமல் இருப்பது நாட்டுமக்களின் நலனுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் உகந்ததாக அமையாது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று சுமுகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.