பள்ளிபாளையம்: தீபாவளி பண்டிகைக்கு பிறகு பருத்தி, ரயான் மற்றும் பாலியஸ்டர் உள்ளிட்ட நூல்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகை வரை கிலோ 150ஆக இருந்த ரயான் நூல், 80 உயர்ந்து தற்போது கிலோ 230 ஆக உள்ளது. பருத்தி நூல் கிலோவிற்கு 100 உயர்ந்துள்ளது. நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் அதே நேரம், உற்பத்தி செய்யப்பட்ட துணியின் விலையை உயர்த்தி விற்க முடியாமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள், தேக்கத்தை தவிர்க்க உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, பள்ளிபாளையம் பக்கமுள்ள வெடியரசம்பாளையத்தில், தற்போது சிங்கில் ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சிங்கில் ஷிப்டில் ஒரு தொழிலாளிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வேலை கொடுக்கின்றனர். வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 4 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.