கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் - இடது முன்னணி இடையே 193 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்கிது. இதற்கான பிரசாரத்தில் இம்மாநில கட்சிகள் ஏற்கனவே தீவிர பிரசாரத்தில் இறங்கி விட்டன. இம்முறை முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறிக்கும் வியூகத்தில் பாஜ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இம்மாநில சட்டப்பேரவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 294. இந்நிலையில், காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையிலான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை, கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், இம்மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரி, இடது முன்னணி தலைவர் பிமான் போஸ் மற்றும் இரு கட்சிகளை சேர்ந்த இதர மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், 294 தொகுதிகளில் 193 தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.