உத்தமபாளையம் : உத்தமபாளையம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக,பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். எனவே உடனடியாக சுகாதார பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நகரின் விரிவாக்க பகுதிகளாக பி.டி.ஆர் காலனி, இந்திரா நகர், மின்வாரிய காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இதேபோல் நகரின் உள் பகுதிகளிலும் பொதுமக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது.
தாலுகா தலைநகரம் என்பதால் அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். நகரின் வெளிப்பகுதிகள் மட்டுமல்லாமல் வளரும் வார்டுகளிலும், சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, உடனடியாக சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தி, டெங்கு பரவாமல் தடுத்திட அனைத்து வார்டுகளிலும், மருந்துகளைத் தெளித்தல், சாக்கடைகள் தூர்வாருதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை உடனடியாக செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதியின் ஆளுங்கட்சி எம்எல்ஏ பரிந்துரையில் போட்டி போட்டு நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைகளை வாங்கிவிடுகின்றனர். ஆனால், இவர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணிகளுக்கும் செல்வதில்லை. மாறாக அதே ஆளுங்கட்சி பவரில், அலுவலக வேலைகளை, ஒயிட் காலர் ஜாப்பாக மாற்றி கவனிக்கின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டப்படுகின்றனர். இதனால் குப்பைகள் டன் கணக்கில் குவிகின்றன. சாக்கடைகள் அள்ளப்படுவதில்லை. இதனால் நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருகிறது.குறிப்பாக டெங்கு, சிக்கன்குனியா, உள்ளிட்ட காய்ச்சல்கள் மறைமுகமாக பரவி உயிர்களை குடிக்கும் ஆபத்து அதிகரித்து வருகிறது.