திருமங்கலம் : ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை கப்பலூர் டோல்கேட்டில் ஏற்பட்ட கடும் நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது முதல் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக விடுமுறை தினங்களில் அதிகளவில் வரும் வாகனங்கள் டோல்கேட்டினை கடப்பதில் ஏற்படும் சிரமத்தினால் பஸ்கள், லாரிகள், கார்கள் என அனைத்தும் டோல்கேட்டில் நீண்டநேரம் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி வருகிறது. முகூர்த்த நாள் என்பதால் நேற்று மாலை முதல் அதிகளவில் வாகன போக்குவரத்து இருந்தது. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மாலை கப்பலூர் டோல்கேட்டினை கடந்து செல்ல தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றன.