விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர்,சிவகாசி, சாத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் இரண்டு என 8 அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இவற்றில் 237 டவுன் பஸ்களும், 181 நீண்ட தூர பஸ்கள் என 418 பஸ்கள் இயக்கப்படுகின்றன.கடந்த 10 ஆண்டுகளில் நீண்ட தூரபஸ்கள் மட்டும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட டவுன் பஸ்களே இன்று வரை இயக்கப்படுகின்றன. அனைத்து டவுன் பஸ்களும் அனுமதிக்கப்பட்ட கால அளவு, பயணத்தூரத்தை கடந்து இயங்கி வருகின்றன. காலாவதியான பஸ்களை இயங்குவதால் பல டவுன் பஸ்கள் ஓட்டை, உடைசலாக காட்சி தருகின்றன. விருதுநகர் மாவட்ட அரசு பஸ்களில் மட்டும் பிற மாவட்டங்களை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.