சத்தியமங்கலம்: தமிழக-கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் சேதப்படுத்திய பெயர் பலகைகளை மீண்டும் தமிழக எல்லைக்குள் நடும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் ராமாபுரம் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் கடந்த 10ம் தேதி நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பெயர் பலகைகளை கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இது சம்பந்தமாக தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி தாளவாடி மலைப்பகுதி பையனா புரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் ஒட்டரள்ளி செல்லும் சாலையில் இருமாநில எல்லையில் வைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான வரவேற்பு பெயர் பலகைகளை மீண்டும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.