திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பன்னாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி உடுமலை செல்வதற்காக நேற்று அதிகாலை திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. காலை 6 மணியளவில் 26-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது.

இதன் காரணமாக மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.  தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி காலை 8 மணி அளவில் நகர்த்தி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதன் காரணமாக தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: