பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே தைத்திருவிழாவை முன்னிட்டு கோட்டை கருப்பண்ணசாமி கோயிலுக்கு பக்தர்கள் ஆயிரம் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கோட்டை கருப்பண்ணசாமி கோயில் தை 3ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் இரும்பு மற்றும் தங்க அரிவாள்களை நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம். தை 3ம் தேதியான நேற்று வாணவேடிக்கைகள், மேளதாளம் முழங்க ஊரின் முக்கிய வீதிகள் வழியாக கோயில் சாமியாடிகள், பூசாரிகள், விரதமிருந்த பக்தர்கள், ஆயிரக்கணக்கான அரிவாள்களை கோயிலுக்குச் எடுத்துச் சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்த பின் அரிவாள்களை, கோட்டை கருப்பண்ணசாமி கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். சுவாமிக்கு பக்தர்கள் வழங்கிய நூற்றுக்கணக்கான பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.