ஜல்லிக்கட்டு நாயகன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஓ பன்னீர் செல்வம்: அலங்காநல்லூர் விழாவில் முதல்வர் பழனிசாமி புகழாரம்!!

மதுரை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு காளை அடக்கும் போட்டியை துவக்கி வைத்து ஆற்றிய உரை:

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு இடையூறு வந்தபோது, அந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு தூணாக விளங்கி, மிக எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெறுவதற்கு காரணகர்த்தாகவாக இருந்து, ஜல்லிக்கட்டு நாயகன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த, மரியாதைக்குரிய அண்ணன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களே!

பெருந்திரளாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டைக் காண வந்திருக்கின்ற பெரியோர்களே! தாய்மார்களே!

வீர விளையாட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்கவிருக்கின்ற இளைஞர் சிங்கங்களே!

பத்திரிகையாளர்களே! ஊடக நண்பர்களே!அரசு அலுவலர்களே!அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்த மண் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய மண்ணாகும். இந்த மண்ணிலே பிறந்த அத்தனை இளஞ்சிங்கங்களும், சீறி வருகின்ற காளைகளை பிடித்து அடக்குவதற்கான பக்குவத்தோடு இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு சீறி வருகின்ற காளைகளை அடக்குகின்ற இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த இந்த ஜல்லிக்கட்டு விழா உலகப் புகழ்பெற்ற விழா என்று சொன்னால் அது மிகையாகாது. உலக மக்கள் அனைவரும் காணக்கூடிய இந்த வீர விளையாட்டை, நம்முடைய கலாச்சார பண்பாட்டை, பாரம்பரியம் மிக்க பண்பாட்டைக் காக்கக் கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டை, மாண்புமிகு அம்மாவின் அரசுதான் நிலைநிறுத்துகிறது என்பதைப்

பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். இந்த வீர விளையாட்டில் கலந்து கொண்டிருக்கிற அனைத்து இளைஞர் பெருமக்களுக்கும், அதோடு, வீரமிக்க காளைகளை வளர்த்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், வருகை தந்திருக்கின்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: