பெயர்களை பதிவு செய்வதில் முறைகேடு: கட்டுமான தொழிலாளர் வாரியமேலாளர் அதிரடி சஸ்பெண்ட்

புதுடெல்லி: டெல்லி தொழிலாளர் அலுவலகத்தில் நடத்திய திடீர் சோதனையில், கட்டுமானத் தொழிலாளர்களைப் பதிவு செய்வதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அதன் மேலாளரை சஸ்பென்ட் செய்து சிசோடியா உத்தரவிட்டார். டெல்லி துணை முதல்வர் சிசோடியா நிதி மற்றும் கல்வித்துறையுடன் சேர்த்து கோபால்ராய் வசம் இருந்த தொழிலாளர்கள் துறையையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கட்டுமானத்தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் அந்த துறையில் உள்ள தொழிலாளர்கள் தங்களது பெயரகளை நல வாரியத்தில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பலரும் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பெயர்களை பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, துறையின் அமைச்சரான சிசோடியா நேற்று வடக்கு-மேற்கு தொழிலாளர் அலுவலகத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முறைகேடுகள் நடப்பதை கண்டறிந்தார். இதையடுத்து சம்மந்தப்பட்ட மேலாளரை பணிநீக்கம் செய்ததோடு, அந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவிட்டார். மேலும் தொழிலாளர்களை பதிவு செய்யும் பணியை உரிய விதிமுறைகளுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு சிசோடியா உத்தரவிட்டார்.

Related Stories: