சென்னை: சென்னை அடையாறில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான சொத்துகளின் ஒரு பகுதியை கடந்த 1994ம் ஆண்டு சிங்கார வேலன் என்பவர் வாங்கியுள்ளார். அந்த சொத்துக்களை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வேறு ஒரு நபருக்கு போலி ஆவணங்கள் மூலமாக விற்றதாக சிங்காரவேலன் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். சென்னை எழும்பூர் மத்திய குற்றபிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கின்போது, ஜனவரி 11ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அவர்கள் நேரில் ஆஜரா வேண்டுமென எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில்திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராம்பிரபு ராஜ், ராஜ் கணேசன், அஸ்வதி திருநாள் ராஜவர்மா, அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா ஆகிய 4 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேற்சொன்ன திருவிதாங்கூர் சமஸ்தான வாரிசுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரதீப்ராஜ் ஆஜரானார்கள், பின்னர் நீதிபதி வழக்கை வரும் பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.