வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

 

அண்ணாநகர், ஏப்.21: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவை வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து அவற்றை சென்னை கிண்டியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்தது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறியதாவது:

காய்கறிகள், பூக்கள், பழங்கள் ஆகிய பொருட்களை விற்பனை செய்து அந்த பணம் விவசாயிகளுக்கு சேர்வதற்கு வங்கியில் செலுத்தினால்தான் மறுநாள் மார்க்கெட்டுக்கு பொருட்களை கொண்டுவருவார்கள். ஆனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திவரும் கெடுபிடி காரணமாக தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காய்கறி, பூக்கள், பழங்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: