இன்னும் 10 நாட்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் துண்டை காணோம், துணியை காணோம் என்று அதிமுகவினர் ஓடப்போகிறார்கள்: ஜெ.அன்பழகன் உருவப்படத் திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை தென் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் மறைந்த ஜெ.அன்பழகன் எம்எல்ஏ படம் திறப்பு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை தி.நகர் பேருந்து நிலையம் அருகில் நடந்தது. சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் தலைமை வகித்தார். தி.நகர் கிழக்கு பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி, தி.நகர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, மயிலை மேற்கு பகுதி செயலாளர் நந்தனம் மதி, மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, சென்னை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மயிலை த.வேலு வரவேற்புரையாற்றினர். வட்ட செயலாளர்கள் கோ.உதயசூரியன், பி.மாரி, மாவட்ட பிரதிநிதி ஜானகிராமன் ஆகியோர் வரவேற்றனர். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நான் பிரச்சாரம் செய்வது என்பது வெறும் டிரெய்லர் தான், மெயின் பிக்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் தான், அவர் இன்னும் 10 நாட்களில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். அதை பார்த்து அதிமுகவினர் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடப்போகிறார்கள். அதனால் தான் தேர்தலுக்கு இன்னும்  3 மாதம் உள்ள நிலையில் கிடைப்பதை சுருட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். திமுக ஆட்சி அமைந்தவுடன் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள். கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் 9 மாதங்களாக அதை கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: