கோவை: வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிற்கு சரக்கு ரெயில் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சீனிவாஸ், முதுநிலை கோட்ட வனிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு சரக்கு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ‘இந்த சரக்கு ரெயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 5 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சென்றடையும். இந்த சரக்கு ரெயில் வஞ்சிபாளையம் (திருப்பூர்), ஆங்கூர் (ஈரோடு), உத்னா (சூரத்), பருச் சந்திப்பு (அங்கலேஸ்வர்), கங்காரியா (ஆமதாபாத்) ஆகிய இடங்களில் நின்று செல்லும். இதேபோல் மறுமார்க்கமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் ராஜ்கோட் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படுட்டு வியாழக்கிழமை இரவு 8.35 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்.