தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் இலங்கை அரசுக்கு துணைபோகும் இந்தியா: தவாக தலைவர் வேல்முருகன் கண்டனம்

சென்னை: 13வது திருத்தச் சட்டம் மூலம் தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு துணை போகிறது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், கடந்த 5ம் தேதி முதல் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அப்போது 13வது சட்டதிருத்தம் குறித்து  இலங்கையே முடிவு செய்யலாம் என்று ஜெய்சங்கர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானது. 20வது சட்டதிருத்தம் மூலம் 13வது சட்டதிருத்தத்தை அழிக்க நினைக்கும், சிங்கள பேரினவாத அரசுக்கு இந்திய அரசு துணைபோகிறது என்பது கண்கூடாக தெரிகிறது.  ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கிற குறைந்தபட்ச சுய மரியாதையையும்  பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக்  கைவிட வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து, மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எனவே, தமிழர்கள் இலங்கை அரசின் சூழ்ச்சி வலைகளை புரிந்து ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

Related Stories: