விழுப்புரம்: கடந்த மக்களவைத் தேர்தலை போன்றே, சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜகவை மக்கள் ஓட, ஓட விரட்டியடிப்பார்கள் என்று திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இரண்டு நாள் பிரசார பயணத்தை நேற்று தொடங்கினார். இளைஞரணி நிர்வாகிகள் இடையே கலந்துரையாடினார். இதன்பின், திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்ற உதயநிதி ஸ்டாலின் வியாபாரிகள், பொதுமக்களிடையே பேசியதாவது:- இந்த அரசு மக்களின் வரிப்பணத்தில் தினமும் விளம்பரம் அளித்து வருகிறது. நான் பிரசாரம் செய்யும்போது வன்முறையை தூண்டுவதாக வழக்கு தொடர்ந்தார்கள். நேற்று ஆபாசமாக பேசுவதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். நான் ஆபாசமாக பேசுகிறேனா? முதல்வர் பழனிசாமி படிப்படியாக வளர்ந்ததாக சொல்கிறார். அவர் சசிகலா காலில் விழுந்து கிடந்தார். தற்போது முதல்வருக்கு 2 ஆப்பு உள்ளது. சசிகலா 27ம் தேதி வெளியே வருகிறார். உடனே அவர் காலில் முதல்வர் விழுந்துவிடுவார்.