கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை நிறைவு: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலக நாடுகளை கலங்கடித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் - அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு முதலில் ஒப்புதல் தந்த நிலையில் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவிஷீல்டு என்ற இந்த தடுப்பூசியை புனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது. ஹைதராபாத் நகரில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரு தடுப்பூசிகளுமே 110% பாதுகாப்பானவை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி அளித்துள்ள நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த தடுப்பூசிகள் வரும் 13ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் 3-வது கட்ட க்ளினிக்கல் பரிசோதனை நிறைவு பெறாத நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகால அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 3-ம் கட்ட பரிசோதனையில் 25800 தன்னார்வலர்கள் பங்கேற்றதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories: