வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குடியாத்தத்தில் திறந்த வேனில் கமல்ஹாசன் பேசியதாவது: குடியாத்தம் சட்டமன்ற தொகுதி காமராஜர் போட்டியிட்டு வென்ற தொகுதி. முடியாத மக்களுக்கு நல்லது கெட்டது நன்றாக தெரியும். ஆகவே மக்கள் நீதி மய்யத்தை குடியாத்தம் தொகுதி மக்கள் ஆதரிப்பார்கள். வரும் வழியில் திறந்தவெளி சாக்கடைகள் இருந்தது. எப்போதும் நகரத்தின் மைய பகுதியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் இப்போதும் சாக்கடை நீர் செல்கிறது. எங்கு பார்த்தாலும் நதிகளாக இருந்த ஆறுகளில், தற்போது கழிவு நீர் சாக்கடைகள், குப்பைகள் காணப்படுகிறது. இது வருத்தத்துக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் கொட்டும் மழையில் கமல்ஹாசன் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.