‘இறந்தும் ஒளி கொடுக்கிறார்’ மகளின் கண்களை தானம் செய்த பெற்றோர்: செய்யாறு அருகே நெகிழ்ச்சி

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தும்பை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (52). குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள். மூத்த மகளுக்கு வரும் 25ம்தேதி பெங்களூருவில் திருமணம் நடக்கவுள்ளதையொட்டி சொந்த ஊரான தும்பை கிராமத்தில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கசென்றனர். இந்நிலையில் நேற்று அனைவரும் கிராமத்திற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றனர். கிணற்றின் படிக்கெட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தபோது நாராயணனின் இளைய மகளான கல்லூரி மாணவி சுதா (19) நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுதாவை மீட்டு செய்யாறு அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கதறி அழுத பெற்றோர், தங்களின் மகள் இறந்தாலும் அவரது கண்கள் மற்றவர்களுக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்று முடிவு  தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில், செய்யாறு தன்னார்வ அமைப்பு உதவியுடன் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனைக்கு சுதாவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

Related Stories: