கவுரிபிதனூர்-சிக்கபள்ளப்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை பணி விரைவில் முடியும்: அமைச்சர் சுதாகர் நம்பிக்கை

பெங்களூரு: கவுரிபிதனூர்-சிக்கபள்ளாபூர் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.  சிக்கபள்ளாபூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சுதாகர் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி வாரியம், பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கவுரிபிதனூர்-சிக்கபள்ளாபூர் இடையிலான 56 கி.மீ. தூரம் சாலையை 30 கோடி நிதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்பந்தகாரர் ஒருவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து திட்டத்தை கைவிட்டார். இதனால் சாலை அமைக்கும் பணிகள் தற்போது வேறு ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜூன் மாதம் பணிகளை முடித்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான நந்திமலையை தற்போது மூன்று துறையினர் நிர்வாகம் செய்து வருகின்றனர். இதை சுற்றுலா துறை மட்டுமே நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் நந்திமலை நிர்வாகத்தை சுற்றுலா துறை கவனிக்கும். இத்துடன் நந்திமலை வளர்ச்சிக்கு மாநில அரசு ₹10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை மாவட்ட நிர்வாகம் தயாரித்துள்ளது. இது ெதாடர்பாக ஒரு வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.  சிறிய நீர்பாசன திட்டத்தின் 77 கோடி நிதியில் கவுரிபிதனூரில் உள்ள தண்டிகானஹள்ளி ஏரியிலிருந்து சுமார் 63 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  முதல்கட்டமாக 40 கிராமங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 23 கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படும். அதே போல் மண்டிகல்லூ பேரூராட்சி கிராமங்களுக்கு போதகுண்டளா ஏரியிலிருந்து குடிநீர் வழங்க 40-50 கோடி நிதி தேவைப்படுகிறது. இதை பெரிய நீர்பாசன துறை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்’’ என்றார்.

Related Stories: