புதுவை முதல்வருடன் சந்திப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டி: திருமாவளவன் பேட்டி

புதுச்சேரி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நேற்று காலை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அரை மணி நேரம் இருவரும் பேசினர். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, முதன்மை செயலாளர் தேவ பொழிலன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் திருமாவளவன் எம்பி அளித்த பேட்டி: இந்தியாவிலேயே கல்வி கட்டணம் இல்லாமல் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் கல்வி கற்க நல்லதொரு அரசாணையை முதல்வர் நாராயணசாமி பிறப்பித்துள்ளார். இந்த திட்டத்தை ஓபிசி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை வைத்திருக்கிறோம். இதை பரிசீலனை செய்வதாக முதல்வரும் உறுதி அளித்திருக்கிறார். 2021ம் ஆண்டு சனாதன சக்திகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கால் ஊன்ற விடாமல் பாதுகாக்க உறுதி ஏற்போம். இந்த ஆண்டு அதற்கான ஆண்டாக மலரும் என்ற நம்பிக்கை உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: