ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே! திருட்டு காரை அனுபவித்த போலீஸ் அதிகாரி

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்தவர்  உமேந்திரா சோனி. இவரது அதிநவீன கார் கடந்த 2018ம் ஆண்டு சர்வீசுக்கு விடப்பட்ட இடத்தில் திருடு போனது. இது குறித்து பார்ரா காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கமாக அந்த காரை சர்வீஸ் செய்யும் நிறுவனத்திடம் இருந்து சோனிக்கு அழைப்பு வந்தது. ‘சர்வீசுக்கு பிறகு கார் சரியாக இயங்குகிறதா?’ என அதில் பேசியவர் விசாரித்தார். இதனால், சோனி அதிர்ந்தார். உடனே, அந்த சர்வீஸ் மையத்துக்கு விரைந்து சென்று விசாரித்தார். அப்போது, கடந்த மாதம் 22ம் தேதி காவல் துறை உயரதிகாரியான குசலேந்திர பிரதாப் சிங் காரை எடுத்து சென்றது தெரிந்தது. இது பற்றி போலீசாரிடம் சோனி மீண்டும் புகார் செய்தார்.

காரை திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்த பிறகு, அதை உரிமை கோரி யாரும் வராதததால் அதை தான் பயன்படுத்தி வந்ததாக பிரதாப் சிங் தெரிவித்தார். உபி.யில் கடந்தாண்டு ஜூலை 3ம் தேதி இம்மாநிலத்தின் பிரபல தாதா விகாஸ் துபேவால் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, குண்டு பாய்ந்து காயமடைந்த போலீஸ் அதிகாரிகளில் பிரதாப் சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருட்டு போன ஊரான் வீட்டு காரை, தனது காரை போல் பயன்படுத்தியது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: