ஹெத்தை அம்மன் கோயில் திருவிழா பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

குன்னூர்: படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு  குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவில் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடி வருகின்றனர். 14 கிராமங்களில் நடக்கும் இந்த பண்டிகையில், ஜெகதளா மற்றும் பேரகனியில் கொண்டாடும் திருவிழா சிறப்பு வாய்ந்தது.

இதில், ஜெகதளாவில் மட்டுமே கன்னி ஹெத்தையம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தப்படும் இந்த பண்டிகையில், ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஜெகதளா ஹெத்தையம்மன் கோயிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக தாய்வீடான கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் வந்து அருள்வாக்கு கூறினர். பின்னர், சுத்தகல் கோயிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, காரக்கொரை மடிமனையில் பூ குண்டம் திருவிழா நேற்று எளிமையாக நடந்தது. 11 பேர் பூ குண்டம் இறங்கி வந்த நிலையில், கொரோனா காரணமாக, தலைமை பூசாரி மட்டுமே பூ குண்டம் இறங்கினார்.பின்னர், பெரியவர்களின் கால்களில் விழுந்து கிராம மக்கள் ஆசி பெற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: