லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவுடன் இங்கிலாந்து முழுமையாக வெளியேறியது. அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுவதற்காக ஐரோப்பிய யூனியன் தொடங்கப்பட்டது. 27 நாடுகளை உறுப்பினராக கொண்ட இந்த அமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற விரும்பியது. இதற்காக, இருதரப்புக்கும் இடையே பிரெக்சிட் ஒப்பந்தம் உருவானது. பல்வேறு முட்டுக்கட்டைகளுக்குப் பிறகு, 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு லண்டன் நேரப்படி 11 மணியுடன் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து முழுமையாக வெளியேறியது. இதன் மூலம், உலகின் அனைத்து நாடுகளுடனும் இங்கிலாந்து இனிமேல் தனது விருப்பப்படி வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை செய்து கொள்ளவும், இருதரப்பு உறவுகளையும் வளர்த்துக் கொள்ள முடியும்.